பெற்றோர் கண்டித்ததால் இளம் காதல் ஜோடி விபரீதமுடிவு!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன்குடியிருப்பை சேர்ந்தவர் தாசன் மகன் விஜய்( வயது 17)இவர் பனைஏறும் தொழில் செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த சுடலைமணி மகள் மேகலா(வயது 16).இருவரும் உறவினர்கள். இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து உள்ளனர்.

மேலும் பெற்றோர்களுக்கு தெரியாமல் சில மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டு ஓடிப்போய் கோவிலில் தாலி கட்டி குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மகளை காணவில்லை என பெண்ணின் தந்தை நாசரேத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

நாசரேத் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்தாக குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விஜயை கைது செய்தனர். மேகலாவை அவரது பெற்றோரிடம் ஓப்படைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையான விஜய், மீண்டும் மேகலாவிடம் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் பெற்றோர்கள் இவர்களை கண்டித்துள்ளனர்.

இதனால் இருவரும் விரக்தி அடைந்து நேற்று இரவு வீட்டில் இருந்து தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் இன்று காலை சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் உள்ள குளத்தின் கரையில் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தனர். அவர்கள் அருகில் விஜய் ஓட்டி சென்ற பைக் கிடந்தது. இதுகுறித்து விஜயின் தந்தை தாசன் நாசரேத் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது நாசரேத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!