கணவனை கொன்று நாடகமாடிய மனைவி… விசாரணையில் போலீஸ் ஷாக்!

திருச்சுழி அருகே மின்வாரிய ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் மனைவியே கணவரை அடித்து கொலை செய்துவிட்டு விபத்து போல் நாடகமாடியது அம்பலம்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அணிக்கலக்கியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் முத்துராமலிங்கம் (45). இவர் கடந்த வருடம் மின்வாரியத் துறையில் பணி கிடைத்து மதுரை அரசரடியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி காலை நரிக்குடி – திருச்சுழி சாலையில் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே படுகாயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.


இதனையடுத்து பொதுமக்கள் திருச்சுழி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி போலீசார் சடலமாக கிடந்த முத்துராமலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து அவரது பெரியப்பா மகன் முருகன் என்பவர் முத்துராமலிங்கத்தின் இறப்பில் மர்மம் இருப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருச்சுழி காவல்துறையினர், நடந்தது திட்டமிட்ட கொலையா? அல்லது விபத்தில் சிக்கி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதா (43), கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாரின் மனைவி என்பதும், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அவர் தனது குழந்தை அன்னபூரணியுடன் முத்துராமலிங்கத்துடன் வந்து விட்டதாகவும், இந்நிலையில் இருவரும் திருச்சுழி பகுதியில் குடியிருந்து பின்பு அணிக் கலக்கியேந்தல் கிராமத்தில் புதிதாக வீடு கட்டி அங்கு குடியிருந்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும், முத்துராமலிங்கம் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்த நிலையில், ஒரு வருடத்திற்கு முன் அவருக்கு மின்வாரியத் துறையில் பணி கிடைத்து மதுரை அரசரடியில் பயிற்சியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன், முத்துராமலிங்கம் மதுரையில் தங்கியிருந்து வேலை பார்த்த நிலையில், நேரம் கிடைக்கும் போது மட்டுமே தனது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

இதற்கிடையில், சுனிதாவுக்கு முத்துராமலிங்கம் ஒர்க் ஷாப்பில் சிறுவயதிலிருந்து வேலை பார்த்து வந்த பள்ளிமடத்தைச் சேர்ந்த மலையரசன் (22) என்ற இளைஞருடன் தொடர்பில் இருந்து வந்ததும், அவரது கணவருக்கு அது தெரிய வரவே அவர் தனது மனைவி சுனிதாவை எச்சரிக்கை செய்து கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுனிதா செல்போனில் மலையரசனிடம் தனது கணவரை கொலை செய்து சடலத்தை விபத்து நடந்த மாதிரி செட் – அப் செய்யுமாறு கூறியுள்ளார்.

உடனே மலையரசன் \அவரது நண்பரான அணிக் கலக்கியேந்தல் பகுதியைச் சேர்ந்த சிவா (23) என்பவருடன் இணைந்து இரவு வீட்டிற்கு வெளியில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த முத்துராமலிங்கத்தை கொலை செய்து, முத்துராமலிங்கத்தின் சடலத்தை இரு சக்கர வாகனத்தில் 3 கிலோமீட்டர் தொலைவில் நரிக்குடி – திருச்சுழி சாலையில் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே தூக்கி எறிந்து விட்டு சென்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

இதனையடுத்து, கொலை செய்யப்பட்ட முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதா மற்றும் மலையரசன், சிவா ஆகிய மூவரையும் திருச்சுழி காவல்துறையினர் கைது செய்தனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!