திருமணமாகி 3 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை மரணம்!

திண்டிவனம் அருகே திருமணமாகி 3 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை செல்போனில் வீடியோ பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன் (26). இவர் பக்கத்து ஊரான நடுவனந்தல் கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணை 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனால் இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் 23-ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதனிடையே அந்தப்பெண்ணுக்கு கடந்த 5 மாதங்களாக வேறு ஒரு நபருடன் காதல் ஏற்பட்டு அவருடன் சென்றுள்ளார்.


இதனால் உறவினர்கள் அவசர அவசரமாக ஏப்பாக்கத்தில் உள்ள குமரேசனின் அத்தை மகளை அதே தேதியில் அதே திருமண மண்டபத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு குமரேசன் பெண்ணின் வீட்டிற்கு செல்லாமல் அவரது வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி மதியம் புதூர் கிராமத்தில் உள்ள அவரது வயலுக்கு சென்ற குமரேசன் வயலில் இருந்த வேப்ப மரத்தில் கயிரால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் குமரேசன் தனது செல்போனில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் அந்தப் பெண்ணை ஏழு வருடங்களாக காதலித்து வந்ததாகவும், நிச்சயம் முடிவுற்று கல்யாணம் வரை வந்து அப்பெண் வேறு ஒருவருடன் ஓடிச்சென்று உள்ளது ஏற்றுக்கொள்ள முடியவில்லை…

அப்பெண்ணுடன் பழகிய தருணங்கள் தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது… பிரிந்து சென்றிருந்தாலும் பரவாயில்லை… 7 வருடமாக காதலித்தவனை 5 மாதத்தில் கிடைத்தவனுக்காக விட்டுவிட்டு சென்றதை ஏற்கவே முடியவில்லை… மேலும் இனி வேறு ஒரு பையனுக்கு இதுபோன்ற செயல் நடைபெற கூடாது எனவும் தன்னுடைய இந்த வீடியோவை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களுக்கும் அனுப்ப வேண்டும்… மச்சான் மணி என்னை மன்னிச்சிடுடா” என்று நண்பனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

திருமணமாகி 3 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த பாவமும் அறியாத அத்தை மகள் தற்போது செய்வதறியாமல் இருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!