ஆசை வார்த்தை கூறி ஆஸ்பத்திரி பெண் ஊழியரை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர்..!


நாகர்கோவில், வட சேரியை அடுத்த கலுங்கடி பகுதியை சேர்ந்தவர் ரெஜிவிமல் (வயது 28). நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று ரெஜி விமல் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறேன். தினமும் வேலைக்கு செல்லும்போது, எங்கள் வீடு அருகில் வசித்து வந்த வாலிபர் ஒருவர் என்னை சந்தித்து காதலிப்பதாக கூறினார். மேலும் திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார்.

அவரது ஆசை வார்த்தையில் மயங்கி நானும் அவரை காதலித்தேன். பின்னர் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்தோம். இதில் நான் கர்ப்பம் ஆனேன். இது பற்றி வாலிபரிடம் கூறினேன். உடனே அவர் என்னை கன்னியாகுமரியை அடுத்த லீபுரம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து என்னை தங்க வைத்தார்.

வேலைக்கு சென்ற நான் வீடு திரும்பாததால் என் பெற்றோர் என்னை தேடினர். நான் வேலை பார்த்த ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். இதில் நான் தனியாக தங்கி இருக்கும் தகவலை தெரிந்துகொண்டனர். உடனே என்னை தேடி நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து விட்டனர்.


அங்கு நான் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எனவே அவர்கள் என்னை அழைத்து கொண்டு கன்னியாகுமரி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். அங்கு போலீசார் என்னையும், என் காதலனையும் அழைத்து விசாரித்தனர். அப்போது என் காதலன், என் கருவில் வளரும் குழந்தைக்கு நான் தான் தகப்பன் என்றும், என்னை உடனே திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி கூறினார். இதை போலீசார் எழுதி வாங்கி கொண்டு எங்களை அனுப்பி வைத்தனர்.

அதன்பின்பு வீட்டுக்கு வந்த காதலன் திடீரென வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது தெரிய வில்லை. இப்போது நான் யாருமின்றி தனியாக தவித்து வருகிறேன்.

என்னையும், என் வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதுகாக்க, என் காதலனை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

ரெஜி விமலுடன், அவரது தாயார் தாயம்மாள் மற்றும் கிறிஸ்தவ முன்னேற்ற சேனையின் மாநில தலைவர் தியோடர் சேம், நிர்வாகிகள் மரிய ஜோசப், குழந்தை சாமி ஆகியோர் உடன் சென்றனர்.-Source:.maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!