உணவு, மது, டீயில் விஷம் கலந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!

மேட்டூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு மது, உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த மனைவியை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரைக்காடு வீரபத்திரன் கொட்டாயை சேர்ந்தவர் சக்திவேல்(37).

இவரது மனைவி புகழரசி(27). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தனது சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வந்த சக்திவேல் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். மேலும், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். புகழரசிக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த உறவினர் முத்துக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதனை சக்திவேல் கண்டித்ததால் 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு புகழரசி தாரமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

சில மாதங்களுக்கு பிறகு ஊர் பெரியவர்கள் சமாதானம் பேசி மீண்டும் இருவரையும் சேர்ந்து வைத்தனர். வீடு அருகருகே இருந்தால்தான் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்படுகிறது என்று அரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த விவசாய நிலத்தில் குடிசை போட்டு சக்திவேல் மனைவி குழந்தைகளுடன் அங்கு சென்று வசித்து வந்தார். இருப்பினும் முத்துக்குமாருடன் ஏற்பட்ட தொடர்பை புகழரசி கைவிடவில்லை.

இதனால் தினமும் மது அருந்தி வரும் சக்திவேல், புகழரசியின் கள்ளத்தொடர்பு பற்றி ஆபாச வார்த்தைகளால் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவனின் வார்த்தைகளை சகித்துக்கொள்ள முடியாத புகழரசி, இனி நாம் நிம்மதியாக வழவேண்டும் என்றால் கணவன் உயிருடன் இருக்கக்கூடாது என்று முடிவு செய்தார். இதற்காக முத்துக்குமாருடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டினார்.

நேற்று முன்தினம் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்று வீடு திரும்பிய சக்திவேல் மனைவியிடம் சமைக்க சொல்லிவிட்டு வெளியே சென்று வந்தார். சமைத்த சாப்பாட்டில் 10 தூக்க மாத்திரைகளை தூள் செய்து போட்ட புகழரசி, அதனை சக்திவேலுக்கு சாப்பிட கொடுத்துள்ளார். பின்னர் குடிக்கும் தண்ணீரிலும் பூச்சிக்கொல்லி மருந்தை கலக்கி கொடுத்துள்ளார்.

அதேபோல் வீட்டில் வைத்திருந்த மதுவிலும் பூச்சி மருந்து கலக்கி கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து டீ கேட்கவே டீயிலும் பூச்சி மருந்தை போட்டு கொடுத்தாராம். நள்ளிரவில் திடீரென சக்திவேலுக்கு வலிப்பு ஏற்படவே முத்துகுமாரை செல்போனில் அழைத்துள்ளார். முத்துகுமார் வந்து பார்த்தபோது சக்திவேல் இறந்து கிடந்தார்.

இதையடுத்து, புகழரசிக்கு ரகசியமாக வாங்கி கொடுத்த செல்போனை வாங்கிக் கொண்டு அங்கிருந்து முத்துகுமார் சென்றுவிட்டார். அவர் இறந்ததை உறுதி செய்த புகழரசி, தனது மகன் மூலம் கணவனின் தம்பி முத்துசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தூங்கியவர் அசையாமல் இருப்பதாக புகழரசி கூறவே, சந்தேகமடைந்த முத்துசாமி கொளத்தூர் போலீசில் புகாரளித்தார். புகாரின்பேரில் புகழரசி, முத்துக்குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தபோது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு விஷம் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரையும் கொளத்தூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையிலடைத்தனர்.-News & image Credit: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!