கட்டையால் வாலிபரின் தலையில் அடித்த நபர்…. பின் நடந்த விபரீதம்!

ஜெயங்கொண்டம் அருகே வாலிபரை அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்வாணன். இவரது மகன் அஜித்குமார் (வயது 29). அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சி என்பவரது மகன் சிவா (20),பன்னீர்செல்வம் என்பவரது மகன் முத்துப்பாண்டி (29). மூவரும் டிரைவர்களாக வேலை செய்து வருகின்றனர். இதில் சிவா என்பவர் அஜித்குமாரின் மாமன் மகளுடனான காதல் பிரச்சனையில் அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

அஜித்குமாரின் மாமன் மகள் சிவாவிற்கு தங்கச்சி முறை என கூறப்படுகிறது. மேலும் சிவாவின் நண்பர் மணிமாறன் என்பவர் முத்துப்பாண்டியின் மனைவியை பற்றி ‘வாழாவெட்டியாக இருக்கிறாய் உன் கணவருடன் நீ வாழ வில்லை’ என தவறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அஜித்குமார் மற்றும் முத்துப்பாண்டி இருவரும் சென்று சிவாவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் அஜித்குமாரை சிவா கட்டையால் தாக்கி உள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காயமடைந்த முத்துப்பாண்டி மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார் சிவாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!