குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்த 30 வயது பெண்ணுக்கு நடந்த சோகம்!

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்த இளம்பெண் பலியான சம்பவத்தில் அவர் இறந்து 5 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ். ஆட்டோ டிரைவரான இவருடைய மனைவி வினோதினி (வயது 30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சின்ன போரூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து வீடு திரும்பிய வினோதினிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது.

இதனால் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வினோதினி, கடந்த சனிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். அரசு டாக்டர்களின் தவறான சிகிச்சையால் வினோதினி இறந்து போனதாக குற்றம்சாட்டிய அவரது உறவினர்கள், வினோதினியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வினோதி உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

சாலை மறியல்

இந்த நிலையில் வினோதியின் உடலை வீடியோ பதிவுடன் கூடிய பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் வினோதினி இறந்து 5 நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று முகலிவாக்கம் பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாங்காடு போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் வரையில் கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறிய அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் நடத்திய ேபச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!