வருங்கால கணவரை கைது செய்த பெண் போலீஸ் அதிகாரி அதிரடி கைது!

மோசடி வழக்கில், தன் வருங்கால கணவரை கைது செய்து ஆச்சரியமூட்டிய அசாம் பெண் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இங்குள்ள நாகாவோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர், சப் – இன்ஸ்பெக்டர் ஜன்மோனி ராபா. இவருக்கும், இதே மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரானா போகாக்கிற்கும் கடந்தாண்டு அக்டோபரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

நவம்பரில் இவர்களுக்கு திருமணம் நடப்பதாக இருந்தது.அரசு வேலை வாங்கித் தருவதாக பொதுமக்களிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக போகாக் மீது புகார் கூறப்பட்டது.


இதையடுத்து அவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தார் ராபா. இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

இந்நிலையில், போகாக் வாயிலாக பல மோசடிகளில் ராபா ஈடுபட்டதாக புகார்கள் வந்துள்ளன.இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் கடந்த சில நாட்களாக விசாரித்து வந்தனர். இதையடுத்து, பெண் சப் – இன்ஸ்பெக்டர் ராபாவை நேற்று கைது செய்துள்ளனர்.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!