தூக்கில் தொங்கிய மனைவி.. காலடியில் 3 மணி நேரம் அழுதபடி இருந்த 1 வயது குழந்தை!

மண்டியாவில், உடற்கல்வி ஆசிரியர் ஒருவரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது காலடியில் அவருடைய ஒரு வயது குழந்தை சுமார் 3 மணி நேரம் அழுது கொண்டே இருந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்

மண்டியா (மாவட்டம்) டவுன் கெம்பேகவுடா படாவனேயில் உள்ள காலனியில் வசித்து வருபவர் ரவிச்சந்தர். இவர் மைசூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா(வயது 30). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 7 வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். திருமணமான புதிதில் ரவிச்சந்தர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். இதனால் அவர் குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு மைசூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் குடும்பத்துடன் மண்டியாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

தூக்கில் தொங்கினார்

கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் இவர்களது பெண் குழந்தைக்கு முதலாவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் கவிதாவும், அவரது ஒரு வயது மகளும் தனியாக இருந்தனர். மகன் பள்ளிக்கும், ரவிச்சந்தர் வேலைக்கு சென்றுவிட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் சுமார் 3 மணி நேரமாக குழந்தை அழுது கொண்டே இருந்தது.

குழந்தை நீண்ட நேரமாக அழுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக கவிதாவின் வீட்டுக்கு சென்றனர். அங்கு கவிதா தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது காலடியில் குழந்தை அம்மா, அம்மா என்று கதறியபடி அழுது கொண்டிருந்தது. அது பார்ப்போரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது.

உருக்கமான கடிதம்

இதையடுத்து அவர்கள் இதுபற்றி ரவிச்சந்திருக்கும், மண்டியா டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மண்டியா டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவிதாவின் உடலை கைப்பற்றினர். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தையும் வீட்டில் இருந்து கைப்பற்றினர். இதற்கிடையே அங்கு ரவிச்சந்தர் வந்தார். அவர் தனது மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுதார். பின்னர் கவிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!