‘டிக்-டாக்’கில் ஆட்டம் போட்ட மனைவி – வெட்டி கொன்ற கணவர் பகீர் வாக்குமூலம்!

நெல்லை அருகே பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு வாகைகுளத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி ராமலெட்சுமி(வயது 35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இவர்கள் திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். கல்யாணசுந்தரம் அங்கு ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வந்தார். ராமலெட்சுமி அங்குள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த மாதம் 13-ந்தேதி குடும்ப பிரச்சினை காரணமாக ராமலெட்சுமி தனது குழந்தைகளுடன் தெற்கு வாகைகுளத்தில் உள்ள தனது தந்தை பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்த ராமலெட்சுமியை அவரது கணவர் கல்யாண சுந்தரம் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.

இதுதொடர்பாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று மானூர் அழகிய மண்டபம் அருகே பதுங்கி இருந்த கல்யாண சுந்தரத்தை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-

எனது மனைவி அடிக்கடி செல்போனில் பேசி கொண்டிருந்தார். அதனை கண்டித்தேன். அவர் கேட்கவில்லை. மேலும் டிக்-டாக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஐடிக்கள் மூலமாக ஒவ்வொரு பாட்டுகளுக்கும் நடனம் ஆடினார். நமக்கு குடும்பம் உள்ளது. அதனால் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதை கைவிடு என்று கூறியும் கேட்காததால் எங்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

கடந்த மாதம் ஏற்பட்ட பிரச்சினையில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!