4,500 ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிப்பு!

ஆஸ்திரேலிய கடலில் 4,500 ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷார்க் விரிகுடாவில் கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய தாவரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த அபூர்வமான தாவரத்தை கண்டுபிடித்தனர்.

மரபணுக் கருவிகளை பயன்படுத்தி ஷார்க் விரிகுடாவில் உள்ள கடற்புல்வெளிகளின் பன்முகத்தன்மையை அறிந்துகொள்ள முயன்றபோது, 180 கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த தாவரத்தை கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். இந்த கடற்புல் 4,500 ஆண்டுகள் பழமையானது என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணரும், ஆய்வின் இணை ஆசிரியருமான மார்ட்டின் பிரீட் கூறுகையில், “இந்த ஒற்றைத் தாவரம் உண்மையில் மலட்டுத்தன்மையுடையதாக இருக்கலாம். அதற்கு மகரந்த சேர்க்கை இல்லை. இருப்பினும் அது எப்படி இவ்வளவு காலம் உயிர் வாழ்கிறது மற்றும் செழித்து வளர்கிறது என்பது உண்மையில் புதிராக உள்ளது” என்றார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!