மருமகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு கண்டெய்னரில் சீர்வரிசைகள்- 6 சகோதரிகள் அசத்தல்!

மருமகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்திய அத்தைகள் குறித்து திருவாரூர் நகர பகுதி மக்கள் பெருமையுடன் பேசி வருகின்றனர்.


திருவாரூரில் சகோதரர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் மகள் மஞ்சள் நீராட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய சகோதரிகள். திருவாரூர் மாவட்டத்தின் நகர பகுதியான கீழ வீதியை சேர்ந்தவர் இலைக்கடை முருகன். இவர் இலை கடை நடத்தி வந்தார்.கடந்த ஆண்டு வாகன விபத்தில் முருகன் உயிரிழந்தார்.

இவருக்கு அட்சய ரத்னா என்கிற 13 வயது மகள் உள்ளார். அட்சய ரத்னாவின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என முருகன் நீண்ட நாட்களாக எண்ணி வந்துள்ளார். இந்நிலையில் முருகன் உயிரிழந்துவிடவே அவரது குடும்பத்தார் செய்வதறியாது திகைத்தனர். முருகனுக்கு 6 சகோதரிகள் உள்ளனர். தனது சகோதரரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அட்சய ரத்னாவின் மஞ்சள் நீராட்டு விழாவை திருவாரூரில் மிக பிரமாண்டமாக நடத்த வேண்டுமென முடிவு எடுத்து உள்ளனர்.

அதன்படி திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2,000 பேருக்கு உணவு வழங்கி சுமார் 600 சீர்வரிசை தட்டுகள் எடுத்து அதனை திறந்த கண்டெய்னர் லாரியில் ஏற்றி செண்டை மேளம் முழங்க, வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று மஞ்சள் நீராட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக கொண்டாடி உள்ளனர்.

இந்த சீர்வரிசை ஊர்வலத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சீர்வரிசை ஊர்வலம் வடக்கு வீதியில் தொடங்கி மண்டபம் இருக்கும் தெற்கு வீதி வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மருமகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்திய அத்தைகள் குறித்து திருவாரூர் நகர பகுதி மக்கள் பெருமையுடன் பேசி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!