வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கழுவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது38). இவர் வாடகை பாத்திர கடை வைத்துள்ளார். இவருக்கும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சியை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் தனலட்சுமி (35) என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் மகேந்திரன் நேற்று முன்தினம் இரவு தொழில் தொடர்பாக வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இதனால் வீட்டில் தனலட்சுமி மட்டும் தனியாக இருந்தார்.நேற்று காலை நீண்ட நேரம் தனலட்சுமி வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அருகில் வசிக்கும் மகேந்திரனின் தாயார் ரஞ்சிதம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தனலட்சுமி உடலில் வெட்டுக்காயங்களுடன் கிடந்தார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தனலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தனலட்சுமியின் தந்தை கோவிந்தராஜ் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தனலட்சுமி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

தனலட்சுமியை கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக தனலட்சுமி கொலை செய்யப்பட்டார் என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கழுவங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!