ரெயில் தண்டவாளம் அருகே நைட்டி அணிந்த பெண்ணின் உடல் மீட்பு!

வடமதுரையில் ரெயில் தண்டவாளம் அருகே கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம்,வடமதுரை அருகே உள்ள அத்திக்குளத்துப்பட்டியில் ரெயில் தண்டவாளம் அருகே அடிபட்ட நிலையில் பெண்ணின் உடல் கிடப்பதாக இன்று அதிகாலை வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்து குறித்து போலீசார் கூறியதாவது, ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் அத்திக்குளத்துப்பட்டியைச் சேர்ந்த ரைஸ் மில் உரிமையாளர் கண்ணன் என்பவரின் மனைவி உமாராணி (வயது 37) என்பது தெரியவந்தது.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அதனைத் தொடர்ந்து கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், நேற்று இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது உமாராணி வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு வெளியே சென்றதாகவும் தெரிவித்தார்.

மேலும் கண்ணன் உமாராணியை தேடிய போது அவர் வீட்டின் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் அடிபட்டு உயிரிழந்து உள்ளார். அதன் பின்னர் உமாராணியின் உடலை கண்ணன் வீட்டுக்குத் தூக்கிச் செல்ல நினைத்து அங்கிருந்து, உடலை எடுத்துள்ளார்.

ஆனால் போலீஸ் விசாரணையில் தனக்கு பிரச்சினை ஏற்படும் என்று நினைத்து மீண்டும் உடலை தண்டவாளத்தின் அருகில் போட்டுவிட்டு, திண்டுக்கல்லில் உள்ள உமாராணியின் பெற்றோருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததாகவும் கூறினார். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் உமாராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது உமாராணியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், உமாராணிக்கு நைட்டி அணியும் பழக்கம் இல்லை, ஆனால் இறந்த உமாராணியின் உடலில் நைட்டி அணிவிக்கப்பட்டுள்ளது.

எனவே உமாராணியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் கூறி உமாராணியின் குடும்பத்தினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!