மனைவி என்று நினைத்து அடுத்தவர் மனைவியை வெட்டிக்கொன்ற தொழிலாளி!

ஆம்பூரில் நள்ளிரவில் தன் மனைவி என்று நினைத்து அடுத்தவர் மனைவியை தொழிலாளி வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலை கல்லூரி அருகே உள்ள இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். (வயது 55). மாட்டு வியாபாரி. இவருடைய முதல் மனைவி ரேணுகாம்பாள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இறந்துவிட்டதால் அவரது மனைவி தனலட்சுமியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதனால் தனலட்சுமி கணவரிடம் கோபித்துக்கொண்டு அடிக்கடி ஆம்பூர் வந்துவிடுவார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவேந்திரன்- தனலட்சுமி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தனலட்சுமி ஆம்பூருக்கு வந்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில் ஆம்பூர் கம்பிகொள்ளைப் பகுதியை சேர்ந்த ஜான் பாஷா என்பவரை ஒரு திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இவரது மனைவி கவுசர். தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது. ஆம்பூர் ரெயில் நிலையம் எதிரே உள்ள நேதாஜி ரோட்டில் ஷூ மற்றும் காலனி விற்பனை கடைகள் உள்ளன. அந்த கடைகளின் முன்பாக இரவு நேரங்களில் ஆதரவற்றவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்கள் படுத்து உறங்குவது வழக்கம்.

தேவேந்திரனின் மனைவி தனலட்சுமி அந்த கடைகளின் முன்பாக இரவில் உறங்குவதாக தேவேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. நேற்று இரவு தனலட்சுமி, ஜான் பாஷா மனைவி கவுசர், அவரது மாமியார் பர்வீன் மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

அங்கு தூங்கிக்கொண்டிருந்த அனைவரும் பர்தா அணிந்து இருந்தனர். நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் ஆம்பூர் வந்த தேவேந்திரன் பர்தா அணிந்து இருந்ததால் இருட்டில் அடையாளம் தெரியாமல் தன்னுடைய மனைவி தனலட்சுமி என்று நினைத்து கத்தியால் கவுசரின் கழுத்து, மார்பு பகுதியில் வெட்டினார்.

அப்போது கவுசர் ரத்த வெள்ளத்தில் வலியால் அலறி துடித்தார். அப்போதுதான் தான் குத்தியது தனது மனைவியல்ல வேற ஒருவரின் மனைவி என தேவேந்திரனுக்கு தெரியவந்தது. அலறல் சத்தம் கேட்டு தனலட்சுமி திடுக்கிட்டு எழுந்தார்.

தனலட்சுமியை கண்ட தேவேந்திரன் ஆத்திரம் அடங்காமல் அவரையும் கத்தியால் குத்தினார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் தேவேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கினர்.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது கவுசர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

மேலும் படுகாயமடைந்து இருந்த தனலட்சுமியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவுசரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!