ரூ.30 லட்சம் மோசடி – வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற தாய்-மகள்!

வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி: வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற தாய்-மகள் சென்னை விமான நிலையத்தில் கைது.

சென்னை வேளச்சேரி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த தனிஷ்கா என்பவர், தனக்கு போர்ச்சுக்கல் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி அரும்பாக்கத்தை சேர்ந்த கிளினா கிரியேட்டா (வயது 29), அவரது தாய் அனிதா கிரியேட்டா (59) ஆகியோர் ரூ.30 லட்சம் மோசடி செய்து விட்டதாக வேளச்சேரி போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் தாய், மகள் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து வேளச்சேரி போலீசார், விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.

இந்தநிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல சென்னை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவரையும் குடியுரிமை அதிகாரிகள் பிடித்து வைத்து, வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விமான நிலையம் சென்ற போலீசார், அனிதா, கிளினா இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் 2020-ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில் வேலை வாங்கி தருவதாக தனிஷ்காவிடம் ரூ.30 லட்சம் வாங்கியதும், பின்னர் அதில் ரூ.14 லட்சத்து 79 ஆயிரத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும், மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதும் தெரிந்தது. கைதான தாய்-மகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!