உடல்களை புதைக்க 3 நாட்களுக்கு முன்பே தோண்டப்பட்ட குழி – வெளியான அதிர்ச்சி தகவல்

சென்னை மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளிகள், 3 மாதமாக கொலைக்கான திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.

சென்னையில் ஐடி கம்பெனி அதிபர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர்களிடம் ஓட்டுநராகப் பணியாற்றிய கிருஷ்ணா தன் நண்பர் ரவி ராயுடன் இணைந்து கொலை செய்து பண்ணை வீட்டில் உடல்களைப் புதைத்து விட்டு 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் தப்ப முயன்ற போது தமிழக போலீசார், ஆந்திர காவல்துறையின் உதவியுடன் கொலையாளிகளைக் கைது செய்தனர்.

விசாரணையில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, பணத்திற்காக இருவரையும் கொலை செய்ய கிருஷ்ணாவும் ரவி ராயும் கிட்டத்தட்ட 3 மாத காலம் திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. அத்துடன் பிணங்களைப் புதைப்பதற்காக 3 நாட்களுக்கு முன்பே குழி தோண்டி வைத்துள்ளனர். மேலும், பண்ணை வீட்டில் தங்கி இருந்த தனது குடும்பத்தாரை பல்வேறு காரணங்கள் சொல்லி கிருஷ்ணா நேபாளத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட கிருஷ்ணாவும், ரவி ராயும் வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட உள்ளனர். கொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா ஆகிய இருவரின் மகன் மற்றும் மகள் இன்று இரவு சென்னை வர உள்ளது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!