புதுமாப்பிள்ளை கத்தியால் குத்தி கொன்ற மர்மநபர்கள்!

திண்டுக்கல் அருகே புதுமாப்பிள்ளை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே அனுமந்த நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பிரபாகரன் (வயது 26). இவர் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அவரது நண்பர் ஐம்புலியும்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்பவரின் பிறந்தநாள் விழாவிற்காக நண்பர்களுடன் பாலகிருஷ்ணாபுரத்தை அடுத்த ஏர்போர்ட் நகருக்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிரபாகரனை கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்தனர். இதில் அனுமந்த நகரைச் சேர்ந்த கார்த்திக்(27), வினோத் கண்ணன் (20) ஆகிய 2 பேருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்திக்குத்தில் பலியான பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த கார்த்திக், வினோத் கண்ணன் ஆகிய 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுக்கு கடந்த ஏப்ரல் 6ந் தேதி தான் தென்றல் தேன்மொழி என்பவருடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. புதுமாப்பிள்ளை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!