5 மாத குழந்தையை கொன்று பெண் எடுத்த விபரீதமுடிவு..!

விபத்தில் கணவர் உயிரிழந்ததால் 5 மாத குழந்தையை கொன்றுவிட்டு பெண் தற்கொலை செய்த சோக சம்பவம் ராய்ச்சூரில் நடந்துள்ளது.

தீயணைப்பு படை வீரர் சாவு

ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் பகுதியை சேர்ந்தவர் கங்காதர் (வயது 36). இவர் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் தீயணைப்பு துறையில் வாகன டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஸ்ருதி (30). இந்த தம்பதிக்கு 5 மாதத்தில் அபிராம் என்ற மகன் இருந்தான். ஸ்ருதி தனது குழந்தையுடன் லிங்கசுகூரிலும், கங்காதர் மங்களூருவிலும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கங்காதர், மங்களூரு நகரில் உள்ள குந்திகான் சந்திப்பு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று கங்காதர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கங்காதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மங்களூரு போக்குவரத்து போலீசார் பலியான கங்காதர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை-தற்கொலை

இந்த நிலையில், கங்காதர் விபத்தில் சிக்கி இறந்தது குறித்து அவரது மனைவி ஸ்ருதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு ஸ்ருதி அதிர்ச்சி அடைந்தார். மேலும் கணவர் இல்லாததால் தானும் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இதையடுத்து அவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை கொன்று தூக்கில் தொங்கவிட்டார். பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் அவருடைய குடும்பத்தினர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, குழந்தையும், ஸ்ருதியும் தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

சோகம்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் லிங்கசுகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததால், குழந்தையை கொன்று ஸ்ருதி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

விபத்து குறித்து மங்களூரு போக்குவரத்து போலீசாரும், தற்கொலை சம்பவம் குறித்து லிங்கசுகூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!