நகை கேட்டு மனைவி தொல்லை – காரை எரித்த பா.ஜனதா நிர்வாகி!

மதுரவாயலில் சொந்த காருக்கு தீ வைத்து நாடகமாடியதாக பாஜக மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் சதிஷ்குமார். பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்து வந்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்- இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் காரில் வந்த பெண் மற்றும் ஆண் இருவரும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு செல்வது போல தெரிந்தது. ஆனால் வந்த நபர்கள் யார் என்று சரியாக அடையாளம் தெரியவில்லை.

இதையடுத்து அருகில் உள்ள மற்றொரு கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் போட்டு பார்த்த போது மற்றொரு காரில் வந்தது சதிஷ்குமார் என்பது தெரிந்தது. மேலும் அவர் தனது கார் மீது பெட்ரோல் ஊற்றுவதும் அதை கண்டு அவரது மகள் ஓடி வந்து தடுப்பதும் அதில் தெளிவாக பதிவாகி இருந்தது. பின்னர் அங்கிருந்து கிளம்பி செல்லும் சதிஷ்குமார் மீண்டும் சிறிது நேரம் கழித்து வந்து காரை தீ வைத்து கொளுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து சதிஷ்குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சதிஷ்குமார் காரை தீயிட்டு கொளுத்தியதை ஒப்புக்கொண்டார். தனது மனைவி நகை வாங்கி தரும்படி கேட்டு அடிக்கடி சதிஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இப்போது நீ கேட்கும் அளவுக்கு நகை வாங்க பணம் இல்லை என்று சதீஷ்குமார் கூறி இருக்கிறார்.

ஆனால் அவர் நகை வாங்கும் ஆசையை விடவில்லை. வீட்டில் இருக்கும் 2 காரில் ஒன்றை விற்றாவது நகை வாங்கி தரும்படியும் கூறி இருக்கிறார்.

இதனால் மனவேதனை அடைந்த சதிஷ்குமார் ஆத்திரத்தில் காருக்கு தீ வைத்து எரித்து விட்டு நாடகமாடியது தெரிய வந்துள்ளது

இதையடுத்து சதிஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 285-ன் கீழ் (தீப்பற்றக்கூடிய பொருட்களை மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தே மெத்தனமாக கையாளுதல்) வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை எச்சரிக்கை செய்து ஜாமினில் விடுவித்தனர்.News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!