இந்து மதத்தை இழிவாக பேசி மதம் மாற சொன்ன ஆசிரியை!

கன்னியாகுமரியில் மாணவி ஒருவர் தனது ஆசிரியை மதமாற்றத்தில் ஈடுபடுத்துவதாக குற்றஞ்சாட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை தையல் வகுப்புக்கு வரும் இந்து மத மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த நிலையில் நேற்று தையல் வகுப்பிற்கு சென்ற மாணவிகளிடம் இதே நடவடிக்கையில் அந்த ஆசிரியை ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து மாணவிகள் உடனடியாக தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பெற்றோர்கள் இரணியல் போலீசாருக்கு தகவலளித்து அவர்களுடன் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து போலீசாரும் விசாரணை நடத்தியதில் மாணவிகள் ஆசிரியையின் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டை அடுக்கினர்.

இந்த நிலையில் தலைமை ஆசிரியர் முன் போலீசார் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அதிகாரிக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் தையல் ஆசிரியை பியாட்ரிஸ் தங்கத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தையல் ஆசிரியை பியாட்ரிஸ் தங்கத்திடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!