கொதிக்கும் குழம்பில் விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாப சாவு!

கும்பகோணம் அருகே கொதிக்கும் குழம்பில் விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்த குழந்தை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர், கோவையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அனுசியா(28). இவர்களுக்கு ரிஷி(2) என்ற ஆண் குழந்தை இருந்தது. அனுசியா தனது வீட்டு வாசலில் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று மாலை வீட்டில் அனுசியா பானி பூரிக்கு குழம்பு தயார் செய்து கொண்டிருந்தார். இதையடுத்து குழம்பு தயாரானவுடன் அடுப்பில் இருந்து பாத்திரத்தை கீழே இறக்கி வைத்துள்ளார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை ரிஷி, கொதித்துக் கொண்டு இருந்த குழம்பில் தவறி விழுந்தது.


பரிதாப சாவு
சூடு தாங்க முடியாமல் குழந்தை அலறி துடித்தது. இதில் படுகாயம் அடைந்த குழந்தை ரிஷியை மீட்டு சிகிச்சைக்காக புளியம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ரிஷி பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கும்பகோணம் அருகே கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!