ஓடும் ரெயிலில் இருந்து திடீரென ஆற்றில் குதித்த பெண் டெய்லர்..!

ஓடும் மின்சார ரெயிலில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் குதித்து பெண் டெய்லர் தற்கொலை செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சின்ன கவானம் ஜோதிலிங்கம் தெருவை சேர்ந்தவர் சஞ்சய் குமார். இவரது மகள் துர்கா தேவி (வயது 23). இவர் பொன்னேரியில் உள்ள ஒரு தனியார் ஆடை நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் துர்காதேவி கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் முறிந்ததாக தெரிகிறது. இதனால் மனவிரக்தியில் இருந்த துர்காதேவி நேற்று பகல் 2 மணியளவில் பொன்னேரியில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி வந்த மின்சார ரெயிலில் பயணம் செய்த போது, எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரை ஒதுங்கிய உடல்

இதைக்கண்ட சக பயணிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து ரெயில்வே போலீசார் உடனடியாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, எண்ணூர் போலீசார் நேற்று மாலை 6 மணி அளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரை ஒதுங்கிய உடலை மீட்டனர். பின்னர் இறந்த பெண் அணிந்திருந்த அடையாள அட்டையை பார்த்து குடும்பத்திற்கு தகவல் தெரிவித்த போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு மேலும் விசாரித்து வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!