நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நடிகர் பலி!

செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர், ஜீவா தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (40). இவர், புதிதாக எடுக்கப்பட்டு வரும் செங்குன்றம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் சினிமா படப்பிடிப்பு முடித்துவிட்டு, தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

செங்குன்றம் – திருவள்ளூர் நெடுஞ்சாலையில், ஆலமரம் பகுதி அருகே சாலையை கடந்த போது, எதிரே பைக்கில் வந்த பம்மது குளம் எல்லையம்மன் பேட்டை கிராமத்தை சேர்ந்த சரவணன் (24), இவர் மீது நேருக்கு நேர் வேகமாக மோதினார்.

இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பாடியநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜெயக்குமாரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். சரவணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!