கல்யாணம் செய்ய வற்புறுத்திய கள்ளக்காதலி… திராவகம் வீசிய வாலிபர்!

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கள்ளக்காதலி வற்புறுத்தியதால் அவரது முகத்தில் வாலிபர் திராவகம் வீசினார்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துராமலட்சுமி (வயது 35). இவர் ஊர், ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தனது தாயுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் முத்துராமலட்சுமி தேனி மாவட்டத்தில் ஜவுளி வியாபாரம் செய்தபோது, போடிநாயக்கனூரைச் சேர்ந்த செல்வம் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் ஜவுளி வியாபாரிதான். அவருக்கு திருமணமாகவில்லை. இதன்பின்பு இருவரும் சேர்ந்து ஊர், ஊராகச் சென்று ஜவுளி விற்றனர்.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலானது. இருவரும் கடந்த 20 நாட்களாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு வந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.

திராவகம் வீச்சு

முத்துராமலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு செல்வத்திடம் அவ்வப்போது வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த செல்வத்துக்கும் முத்துராமலட்சுமிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்வம், தான் ஏற்கனவே வாங்கி மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து முத்துராமலட்சுமி முகத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதனால் முகம் வெந்து முத்துராமலட்சுமி அலறினார். பின்னர் அவர், நெல்லை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து நெல்லை போலீசாரிடம் அவர் புகார் செய்தார்.

வலைவீச்சு

நெல்லை போலீசார், சிவகங்கை மாவட்ட போலீசாருக்கு அதுபற்றி தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக தேவகோட்டை நகர் போலீசார் செல்வம் மீது வழக்குபதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!