ரூ.30 கோடி மோசடி… சினிமா தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது!

முன்னாள் அமைச்சரின் மகன் நிறுவனத்தில் ரூ.30 கோடி மோசடி செய்த வழக்கில், சினிமா தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆவார். இவரது மகன் ஆண்டோ ஸ்டாலின் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

சென்னை அயனாவரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தேன். அந்த நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த ரமேஷ் என்பவர், போலி நிறுவனங்களை தொடங்கி, அந்த நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதுபோல கொடுத்து, ரூ.30 கோடி மோசடி செய்து விட்டார். இதற்கு உடந்தையாக செயல்பட்ட சினிமா தயாரிப்பாளர் சுதாகரன் மற்றும் ரமேசின் 2-வது மனைவி பிரேமசுதா உள்ளிட்ட சிலர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, ரூ.30 கோடி பணத்தை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

3 பேர் கைது

இந்த புகார் மனு அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் ரமேஷ் முதலில் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் சினிமா தயாரிப்பாளர் சுதாகரன் மற்றும் ரமேசின் 2-வது மனைவி பிரேமசுதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் போலீசார் முடக்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!