உலக்கையால் தாயை அடித்து கொன்ற வளர்ப்பு மகன் !

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே ராசாபட்டியை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மனைவி வீரம்மாள் (வயது 46). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் செல்வராஜ் என்பவரை வளர்த்து வந்தனர். 8-ம் வகுப்பு மட்டுமே படித்த செல்வராஜ் சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர், அவ்வப்போது ராசாப்பட்டிக்கு வந்து வீரம்மாளிடம் பணம் கேட்டு வந்தார்.

வீரம்மாள் தனது மகன் செல்வராஜிக்கு ரூ.80 ஆயிரம் வரை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையில் இருந்து வந்த செல்வராஜ், வீரம்மாளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது பணம் இல்லை என்று வீரம்மாள் மறுத்துள்ளார். இதேபோல் நேற்று மீண்டும் பணம் வேண்டும் என்று செல்வராஜ் கேட்டபோது பணம் இல்லை என்று வீரம்மாள் மறுத்து வீட்டின் அருகே குளிக்க சென்றுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து வீரம்மாள் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த வீரம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீரம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வளர்ப்பு தாயை கொலை செய்த செல்வராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.- source: maalaimurasu * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!