நேருக்கு நேர் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்து – 2 வாலிபர்கள் உயிரிழப்பு.!

மேலூர் அருகே பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவர் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சுண்ணாம்பூரை சேர்ந்த முருகேசன் மகன் அர்ஜுனன் ( 20) வேன் டிரைவராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் உதயா(19).

சிவகங்கை பாப்பாகுடியை சேர்ந்த வீரையா என்பவரது மகன் ஸ்ரீகாந்த்(18). இவர் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று இரவு திருவாதவூரில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளனர்.

இவர்கள் கட்டையன்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதி உள்ளனர். இந்த விபத்தில் அர்ஜுன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இருவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரழந்தனர். படுகாயம் அடைந்த உதயாவை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனை அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த மேலூர் போலீசார் உயிரிழந்த அர்ஜுன் மற்றும் ஸ்ரீகாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!