தாயை இழந்த அரசு பெண் ஊழியருக்கு வளைகாப்பு நடத்தி அசத்திய ஊழியர்கள்!

கோவை மாவட்டம் அன்னூரில் தாயை இழந்த அரசு பெண் ஊழியருக்கு சக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் குணவதி (வயது 29). இவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

இவர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக அன்னூரில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு குணவதிக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் குணவதி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியான உள்ளார். இவருக்கு தாயார் இல்லை.

இதனால் அவர் தனக்கு வளைகாப்பு நடக்குமா? என மனச்சோர்வுடன் இருந்து வந்தார். இதையடுத்து அவரது மனவலியை போக்க அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் இணைந்து வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர்.

நேற்று பழம், இனிப்பு, சந்தனம், பூக்கள் ஆகியவற்றுடன் அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியினை நடத்தி அசத்தினர்.

அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமா தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணி குணவதிக்கு சக ஊழியர்கள் வளையல் போட்டு,பொட்டு, பூ வைத்து ஆரத்தி எடுத்து தாய் ஸ்தானத்தில் இருந்து இந்த வளைகாப்பு நடத்தினர்.

இதனால் மனம் மகிழ்ந்து ஒவ்வொரு ஊழியர்களுக்கும் கர்ப்பிணி குணவதி நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்து உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!