வளர்ப்பு நாய்க்கு கோலாகல வளைகாப்பு – அறுசுவைகளில் உறவினர்களுக்கு விருந்து !

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே செல்லப்பிராணிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேட்டூரை அடுத்த மேச்சேரி இந்திரா நகரை சேர்ந்த நடராஜன், அவரது மனைவி சுசீலா ஆகிய இருவரும் புகைப்படக் கலைஞர்கள் ஆவர். கடந்த 20 மாதங்களாக ஹைடி என்ற ஆண் பொமேரியன் நாயும், சாரா என்ற பெண் பொமேரியன் நாயும் வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சாரா கர்ப்பமடைந்ததால் வளைகாப்பு நடத்த முடிவு செய்து பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கு வழங்கி வளைகாப்பு நடத்தப்பட்டது.

அப்போது 2 நாய்களையும் தனித்தனி சேர்களில் அமர வைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து சாராவிற்கு வளையல்கள் மாட்டப்பட்டன.

வளைகாப்புக்கு வந்த அனைவருக்கும் இனிப்பு, காரம் உள்ளிட்ட அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. மேலும் செல்லப்பிராணி சாராவுக்கு வளையல் மாட்டிய 30 பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, தட்டு, கண்ணாடி, சீப்பு, தாலிக்கயிறு,மஞ்சள்-குங்குமம் அடங்கிய தாம்பூலம் வழங்கப்பட்டது.

இதன் மூலம் செல்லப்பிராணிகளுக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்ற தனது பிள்ளைகளின் ஆசையை, பெற்றோர் நிறைவேற்றி இருக்கின்றனர்.- source: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!