சாலையோரத்தில் காய்கறி விற்ற மூதாட்டியிடம் ரூ.10 ஆயிரம் பறித்து சென்ற வாலிபர்கள்!

சாலையோரத்தில் காய்கறி வியாபாரம் செய்த மூதாட்டியிடம் பட்டப்பகலில் ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் மதனாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா (வயது 65). குழந்தைகள் இல்லாத நிலையில் கணவரை பிரிந்து வாழும் இவர் வாணியம்பாடி பஜார் வீதியில், சாலையோரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம்போல நேற்று காலை வாணியம்பாடி பஜார் வீதி பகுதியில், சாலையோரத்தில் காய்கறிகள் விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.அவர்களில் ஒருவன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி மூதாட்டி வசந்தா சுருக்குப் பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் வெள்ளிக் கொலுசை பறித்தான். பின்னர் மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற மற்ற 2 பேருடன் அந்த ஆசாமியும் தப்பி சென்றான். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிட்டார்.

போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் அந்த வாலிபர்கள், மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் அந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!