மதிய உணவை மட்டுமே சாப்பிட்டு வாழும் 3 குழந்தைகள் – பெற்றோரை இழந்து தவிப்பு!

பெற்றோரை இழந்து நிர்க்கதியாய் தவிக்கும் தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், வீட்டை பராமரிக்கவும், படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும் என முதலமைச்சருக்கும், கலெக்டருக்கும் 3 குழந்தைகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் டெய்லர், இவரது மனைவி வேண்டா. தம்பதியினருக்கு கார்த்திகா (வயது15), சிரஞ்சீவி (14), நிறைமதி (10) 2 மகள் 1 மகன் உள்ளனர்.

அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கார்த்திகா 10-ம் வகுப்பும், சிரஞ்சீவி 9-ம் வகுப்பும், நிறைமதி 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுக்கு முன்பு லோகநாதன் நோய்வாய்பட்டு இறந்துவிட்டார்.

வேண்டா 100 நாள் வேலைக்கு சென்று 3 குழந்தைகளை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த வேண்டா கடந்த 3 மாதத்திற்கு முன்பு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இதனால் பெற்றோரை இழந்து நிர்கதியாய் தவிக்கும் கார்த்திகா, சிரஞ்சீவி, நிறைமதி ஆகிய 3 குழந்தைகளும் தங்களின் தட்டை வீட்டில் தனியாக வாழ்ந்து வருகின்றனர். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்கின்றனர்.

மதிய நேரத்தில் அரசு பள்ளியில் வழங்கும் சத்துணவை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர்.

காலை மற்றும் இரவில் சாப்பாடு கிடைப்பதில்லை. உணவு வழங்க யாரும் இல்லாத நிலையில் தவித்து வருவதாக 3 குழந்தைகள் கண்ணீர் மல்க கூறினர்.

வீட்டின் அருகில் உள்ளவர்களும் உறவினர்களும் சில உதவிகள் செய்வதாகவும் தொடர்ந்து உறவினர்களிடம் உதவி கேட்க தயக்கமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அவர்கள் வசித்து வரும் தட்டை வீடு மிகவும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. வீட்டில் எந்தவித பாதுகாப்பு வசதிகள் இல்லை. வீடு எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், வீட்டை பராமரிக்கவும், படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும் எனவும் முதல்-அமைச்சருக்கும், கலெக்டருக்கும் 3 குழந்தைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு உடனடியாக பெற்றோரை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என கிராம மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!