ஆசிரியர்-மகள் மர்ம மரணம்- போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலை அருகே ஆசிரியர் மற்றும் அவரது மகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை அடுத்த கீழ்செட்டிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (வயது40) இவர் சே.கூடலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

சிவபாலனுக்கு திருமணமாகி ரம்பா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் ஆகியோர் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவபாலன் தனது செல்போனை வீட்டில் விட்டுவிட்டு வெளியில் சென்றார். அப்போது அவரது வீட்டில் மகள் தேவிப்பிரியா (17) மயங்கி கிடந்தார்.அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் மாயமான சிவபாலன் மணலூர்பேட்டை செல்லும் ரோட்டில் உள்ள காட்டில் கழுத்து, கை நரம்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

அவரது மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவபாலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தேவிபிரியாவும், சிவபாலனும் எப்படி இறந்தனர்? என்பது மர்மமாக உள்ளது.அவர்கள் இருவரும் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஆனால் அவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவில்லை.

தேவிப்பிரியா ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.அவர் 10-ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.சிவபாலன் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.அவர் திருவண்ணாமலை மாவட்டம் வேலையாம்பாக்கத்தை சேர்ந்த ரம்பாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த மர்மசாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவிப்பிரியா இறந்தது தொடர்பாக தண்டராம்பட்டு போலீசாரும், சிவபாலன் இறந்தது தொடர்பாக தச்சம் பட்டு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை முடிவில் மேலும் பல தகவல்கள் தெரியும் என்று கூறப்படுகிறது.இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!