குடிபோதையில் மனைவியை தாக்கிய கணவர்… பின்னர் நிகழ்ந்த விபரீதம்…!


அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் தம்பதிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவரை போலீசார் கைது செய்தனர். அரும்பாக்கம் எம்.எம். டி.ஏ. காலனி எச்.பிளாக் திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் தினகரன்.

தனியார் ஓட்டலில் பணியாற்றி வருகிறார். தினகரன் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கனகவள்ளி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

கனகவள்ளிக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்களுக்கு முன் கணவர் இறந்து விட்டதால் தனது இரண்டு குழந்தைகளையும் மதுராந்தகத்தில் உள்ள தாயார் வீட்டில் விட்டுவிட்டு தினகரனுடன் 2 ஆண்டாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் கனகவள்ளி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கனகவள்ளி சாவில் மர்மம் இருப்பதாக தாய் அமிர்தம் அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில் தினகரன் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதும் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரிந்தது. சம்பவத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறின் போது குடிபோதையில் தினகரன் கனகவள்ளியை கடுமையாக தாக்கியதால் உள்காயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கனகவள்ளி மன உளைச்சலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தினகரன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!