ஆப்கனில் இருந்து உக்ரைனுக்கு தஞ்சம் – மீண்டும் வேறு நாட்டில் தஞ்சம் அடையும் நபர்!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நிலையில், அஜ்மல் ரஹானி அங்கிருந்து குடும்பத்துடன் 1,100 கிலோமீட்டர் பயணித்து போலந்து எல்லையை அடைந்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் அஜ்மல் ரஹ்மானி (40). காபூல் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்தார். நேட்டோ சார்பில் அவர் பணியில் இருந்துள்ளார். இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரஹ்மானிக்கு அச்சுறுத்தல்கள் வந்தன.

இதனால் ஆப்கனிலிருந்த வீடு, கார் என எல்லாவற்றையும் விற்று அங்கிருந்து குடும்பத்தை அழைத்துக் கொண்டு உக்ரைன் நாட்டின் ஒடேசா எனும் துறைமுக நகரில் குடும்பத்துடன் தஞ்சம் புகுந்தார். தனக்கென வேலை தேடிக் கொண்டு புது வாழ்க்கை தொடங்கினார்.

இதற்கிடையே, உக்ரைன் மீது ரஷியா சில தினங்களுக்கு முன் போர் தொடுத்தது. ஆப்கானிஸ்தானில் வசித்த அனுபவம் இருந்ததால் நிலைமையை உணர்ந்து குடும்பத்துடன் 1,100 கிலோமீட்டர் பயணித்து போலந்து எல்லையை அடைந்துள்ளார்.

இந்நிலையில், போலந்து நாட்டில் தஞ்சம் புகுந்த ரஹ்மானி செய்தியாளரிடம் கூறியதாவது:

ஒரு போரிலிருந்து தப்பித்து இங்கு வந்தேன். இங்கேயும் போர் ஆரம்பித்துவிட்டது. என்னை துரதிர்ஷ்டம் துரத்துகிறது. மனைவி, மகள், மகனுடன் 30 கிலோமீட்டர் நடந்து இங்கு வந்துள்ளோம். என்னைப் போல் பலர் இங்கு வந்துள்ளனர். என் எதிர்காலம் என்னாகுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன். இருந்தாலும் என் குடும்பம் என்னுடன் இருப்பதால், அதைவிட வேறு பெரிதில்லை என தெரிவித்தார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!