ஆயுதப்படை குடியிருப்பில் கடிதம் எழுதி வைத்து பெண் போலீஸ் விபரீதமுடிவு!

பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் என்ன? பணிச்சுமை காரணமா? அல்லது குடும்பத்தில் ஏதாவது பிரச்னையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் அடுக்கம் பாறை அருகே உள்ள மூஞ்சூர்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆயுதப்படை பெண் போலீஸ்காரர் இந்துமதி (வயது 30). இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு போலீஸ் வேலையில் இந்துமதி சேர்ந்தார். கடந்த சில ஆண்டுகளாக வேலூர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார்.

தற்போது பாகாயத்தில் உள்ள தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவரது குழந்தைகள் மேட்டுஇடையம்பட்டியில் உள்ள அவரது மாமனார் வீட்டில் தங்கி உள்ளனர். அங்கிருந்து தினமும் பள்ளிக்கு குழந்தைகள் சென்று வருகின்றனர். நேற்று இந்துமதி குழந்தைகளை பார்த்து விட்டு பின்னர் ஆயுதப்படை குடியிருப்புக்கு வந்தார்.

இரவு அவர் மீண்டும் பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக பெண் காவலர்கள் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அவரது போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக தெரிவித்தது.

இதுகுறித்து ஆயுதப்படை தலைமை அலுவலகத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். அவருடைய தம்பி வேலூர் ஆயுதப்படை குடியிருப்புக்கு நேற்றிரவு 10.30 மணியவில் வந்தார்.

பூட்டியிருந்த கதவை உடைத்து பார்த்தபோது இந்துமதி மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்டு போலீசார் மற்றும் அவரது தம்பி அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்துமதி தூக்கில் தொங்கிய அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு அவர் வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்துமதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் என்ன? பணிச்சுமை காரணமா? அல்லது குடும்பத்தில் ஏதாவது பிரச்னையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் ஆயு தப்படை போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!