வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம் – பெண்ணுக்கு நடந்த மோசடி!

வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்ற வாட்ஸ்-அப் தகவலை நம்பி பெண் ஒருவர் ரூ.2½ லட்சத்தை இழந்துள்ளார். இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 38). இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் இல்லாத வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது, வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்ற தகவல்தான் அது.

இதனை நம்பிய ஜெயந்தி, அந்த வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி தகவல் கேட்டுள்ளார். அப்போது ஒரு டெலிகிராம் குழுவில் ஜெயந்தியின் நம்பரை இணைத்து உள்ளதாக தெரிவித்து ஒரு இணையதளத்தின் லிங்கை கொடுத்துள்ளனர். அதில் சில விவரங்களை இணைத்துள்ளனர்.

பின்னர் ஜெயந்தி மேற்படி இணையதளத்திற்குள் சென்று புதிதாக பெயர், பாஸ்வேர்டு உருவாக்கி உள்ளார். அதற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்ததால் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி உள்ளார். இறுதியில் மனுதாரரின் வங்கிக்கணக்கில் லாபமாக இருமடங்கு பணம் வந்துள்ளதாக பொய்யான தகவல் அனுப்பி உள்ளனர்.

இதனை நம்பிய ஜெயந்தி கூடுதல் பணம் வரும் என்று நம்பி மொத்தம் ரூ.2,63,820 வரை பணம் செலுத்தி உள்ளார். பின்னர் அதில் இருந்து வெளியேறி வங்கிக்கணக்கை சோதித்த போது, அதில் அவரது பணம் மட்டும் எடுக்கப்பட்டு இருந்ததும், அவருக்கு எந்த பணமும் வரவில்லை என்பதும் தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயந்தி, இதுகுறித்து ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எந்த எண்ணில் இருந்து ஜெயந்திக்கு வாட்ஸ்-அப் தகவல் வந்தது, அதை அனுப்பியவர்கள் யார், பணம் எவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் வரும் இதுபோன்ற மோசடி தகவல்களை நம்பி யாரும் பணம் செலுத்தக்கூடாது என்றும், இதுபோன்ற விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!