மனைவி- 2 மகள்களை கொன்று தொழிலாளி விபரீதமுடிவு… அதிர வைத்த காரணம்!

ஒரே குடும்பத்தில் மனைவி, 2 மகள்களை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 55). இவரது மனைவி புவனேஸ்வரி (45).

இவர்களுக்கு தனலெட்சுமி (22), வினோதினி (19), அட்சயா (17) ஆகிய மூன்று மகள்கள். இதில் வினோதினி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அட்சயா பிளஸ்-2 படித்து வந்தார்.

லெட்சுமணன் வீட்டின் வாசலிலேயே டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவரது மூத்த மகள் தனலெட்சுமி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் லேப்பில் பணிபுரிந்து வந்தபோது மாற்று மதத்தை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது பின்னர் காதலாக மாறி உள்ளது.

இதற்கு பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் தனலெட்சுமி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெற்றோருக்கு தெரியாமல் அந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பெரும் மன உளைச்சலில் லெட்சுமணன் இருந்து வந்துள்ளார். மூத்த மகளின் நடவடிக்கையால் மற்ற 2 மகள்களின் வாழ்க்கை பாழாகி விட்டதே, குடும்ப கவுரவம் போய்விட்டதே என்று அருகில் உள்ளவரிடம் புலம்பி வந்தாக கூறப்படுகிறது.

லெட்சுமணன் தினமும் காலை 4 மணிக்கு டீக்கடையை திறந்து விடுவது வழக்கம். அப்போது மகள் அட்சயா வாசல் கூட்டி கோலம் போடுவாராம்.

இந்நிலையில் இன்று காலை 7 மணி வரை டீக்கடை திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது புவனேஸ்வரி அவரது மகள்கள் வினோதினி, அட்சயா ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.

அருகில் லெட்சுமணன் தூக்குப்போட்டு இறந்து கிடப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி உடனடியாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் மற்றும் போலீசார் புதுச்சேரி கிராமத்திற்கு உடனடியாக விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

அப்போது நடத்திய முதல்கட்ட விசாரணையில் லெட்சுமணன் தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் மகள்கள் வினோதினி, அட்சயா ஆகியோரை தூங்கிக் கொண்டிருந்தபோது கிரைண்டர் குழவி கல்லால் தலையிலும், நெஞ்சிலும் தாக்கி கொலை செய்து விட்டு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில் மூத்த மகள் தனலெட்சுமி மாற்று மதத்தை சேர்ந்த வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு ஓடியதால் மனவேதனையுடன் இருந்து வந்த லெட்சுமணன் விரக்தியிலும், ஆத்திரத்திலும் தனது மற்ற 2 மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் கீழ்வேளூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரே குடும்பத்தில் மனைவி, 2 மகள்களை அடித்து கொன்றுவிட்டு தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அப்பகுதியில் கிராம மக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!