மீண்டும் ஒன்றாக இணைந்த இசை சகோதரர்கள்!

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜாவின் ரீயூனியன் புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா. இவரின் இசைக்கு இன்றளவும் ரசிகர்கள் பட்டாளம் எதிர்ப்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறது. இவரது தம்பி, இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன். இவர்கள் இருவரின் கூட்டணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே குவிந்திருக்கிறது. இளையராஜாவின் இசையில் பல பாடலுக்கு கங்கை அமரன் பாடல் வரிகள் எழுதியிருக்கிறார்.

கங்கை அமரன் இயக்கி இளையராஜா இசையில் உருவான எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் போன்ற பல படங்கள் இன்றளவும் ரசிகர்கள் பேசும் படமாக இருக்கிறது. குறிப்பாக இவர்கள் கூட்டணியில் உருவான செந்தூரப்பூவே செந்தூரப்பூவே, பூவரசம் பூ பூத்தாச்சு, என் இனிய பொன் நிலாவே, காற்றில் எந்தன் கீதம் பாடல்கள் அனைவரையும் இன்றும் முணுமுணுக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

தற்போது இளையராஜாவும் கங்கை அமரனும் சந்தித்திருக்கின்றனர். அந்த சந்திப்பில் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவும், பிரேம்ஜி அமரனும் அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளனர். இந்த புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!