காட்டுப் பகுதியில் மது குடிக்க சென்ற 2 இளைஞர்கள்… 5 பேர் கும்பல் வெறிச்செயல்!

திருப்பூரில் வழிப்பறி கும்பல் பணம், செல்போனை பறித்து வாலிபரின் தலையை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா போனேரிராஜபுரம் வைக்கிள் கீழத்தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சதீஷ்குமார்(வயது 23). திருமணம் ஆகாத இவர் திருப்பூர் அவினாசி சாலை பகுதியில் உள்ள ஒரு எம்பிராய்டரிங் நிறுவனத்தில் தங்கி அங்கேயே வேலை செய்து வந்தார். இவருடன் திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த தனபால் மகன் ரஞ்சித்(22) என்பவரும் வேலை செய்து வருகிறார்.

நண்பர்களான இவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருப்பூர் செரங்காடு பாரதிநகர் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து அங்கேயே தங்கினர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இரவு சதீஷ்குமார், ரஞ்சித் இருவரும் செரங்காடு காட்டுப்பகுதிக்கு மது குடிக்க சென்றனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் அவர்களை வழிமறித்து செல்போன் மற்றும் பணத்தை கொடுக்குமாறு மிரட்டினர். ஆனால் அவர்கள் கொடுக்க மறுத்ததால் இருவரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியது.

இதனால் பயந்துபோன ரஞ்சித் அங்கிருந்து தப்பி ஓடினார். கும்பலிடம் சிக்கிய சதீஷ்குமார் தனது செல்போன் மூலம் ரஞ்சித்தை தொடர்பு கொண்டு, தன்னை காப்பாற்ற வருமாறு அவரை அழைத்தார். இதையடுத்து அங்கு வந்த ரஞ்சித்குமாரை அந்த கும்பல் ஆயுதத்தால் தாக்கி, வயிற்றில் கத்தியால் குத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து தப்பி வந்த ரஞ்சித் ஒரு நிறுவனம் முன்பு விழுந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த நல்லூர் போலீசார் அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கும்பலின் பிடியில் இருக்கும் சதீஷ்குமாரை காப்பாற்றும்படி ரஞ்சித் போலீசாரிடம் கூறினார்.

உடனே போலீசார் குறிப்பட்ட காட்டுப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை நிலை குலைய செய்தது. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சதீஷ்குமார் பிணமாக கிடந்தார். அவரிடம் இருந்து செல்போன், பணத்தை பறித்த கும்பல் அவரை தலையை துண்டித்து படுகொலை செய்து விட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு, தலையை எடுத்து சென்றது தெரியவந்தது. அவரது தலையை போலீசார் தேடியபோது கிடைக்கவில்லை.

இதையடுத்து சதீஷ்குமாரின் உடலை மட்டும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நேற்று காலை துணை போலீஸ் கமிஷனர் ரவி, உதவி கமிஷனர் லட்சுமண பெருமாள் மற்றும் போலீசார் கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சதீஷ்குமார் உடல் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயம் மற்றும் கைரேகைகளை சேகரித்தனர். இதற்கிடையில் நேற்று இரவு வரை சதீஷ்குமார் தலை கிடைக்கவில்லை. இந்த கொலை தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கொலை நடந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் வழிப்பறி கும்பலின் உருவம் பதிவாகி உள்ளதா என்று தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

திருப்பூரில் வழிப்பறி கும்பல் பணம், செல்போனை பறித்து வாலிபரின் தலையை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!