இளநீர் கடை போட்டியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

திருச்சியில் சகோதரிகளுக்குள் வியாபாரம் செய்திவல் ஏற்பட்ட போட்டி காரணமாக இளம்பெண்ணை வெட்டிக்கொலை செய்த வழக்கில் அக்காள் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


சகோதாிகள்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு கலைவாணி, கலைச்செல்வி (வயது 34), முத்துலட்சுமி (30) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஆபீசர்ஸ் காலனியில் தனித்தனியாக வியாபாரம் செய்து வருகிறார்கள். கலைவாணி கம்பங்கூழ் வியாபாரமும், கலைச்செல்வி ஜூஸ் கடையும், முத்துலட்சுமி இளநீர் வியாபாரமும் செய்து வந்தனர்.

இதில் முத்துலட்சுமியின் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் தனது தந்தை சிங்கதுரையுடன் சேர்ந்து இளநீர் வியாபாரத்தை கவனித்து வந்தார்.


அரிவாள் வெட்டு
இந்தநிலையில் தொழில் போட்டி காரணமாக அக்காள் கலைச்செல்விக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்தது. கடந்த 6-ந் தேதி மாலை கலைச்செல்வி, அவரது கணவர் நாகராஜ் ஆகியோர் சிங்கதுரையிடம் அங்கு இளநீர் கடை போடக்கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனே முத்துலட்சுமி தனது தந்தைக்கு ஆதரவாக நாகராஜை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் கையில் வைத்திருந்த அரிவாளால் முத்துலட்சுமியின் தலையில் ஓங்கி வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.


2 பேர் கைது
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, நாகராஜ், கலைச்செல்வி ஆகியோரை கைது செய்தனர். இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை அரசு மருத்துவமனை போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து உள்ளனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!