25 ஆயிரத்துக்கு ஏலம் போன எலுமிச்சம் பழம்..!

கொடுமுடி அருகே மகா மாரியம்மன் மடியில் இருந்த எலுமிச்சம்பழத்தை பழனிக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்ற பக்தர் ரூ.25 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுத்து சென்றார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பழனிக்கவுண்டன் பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவில் பொங்கல் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 20-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடை பெற்றது. அன்றிலிருந்து தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிசேகம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது. தினமும் கோவிலை சுற்றி அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 25-ந் தேதி அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.

இதனையடுத்து 26-ந் தேதி காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி வந்த பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 27-ந் தேதி மதியம் பெண்கள் அனைவரும் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டனர். 28-ந் தேதி மஞ்சள் நீராட்டு, மறு பூஜை நடைபெற்றது.

விழா முடிவில் அம்மன் மடியில் வைக்கப்பட்டு இருந்த எலுமிச்சம்பழம் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் பழனிக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்ற பக்தர் ரூ.25 ஆயிரத்துக்கு எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்து வீட்டுக்கு எடுத்து சென்றார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!