வீட்டை விட்டு வந்த கள்ளக்காதல் ஜோடி விபரீதமுடிவு..!

பெங்களூரு அருகே, கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.

கள்ளக்காதல்

ராய்ச்சூரை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 28). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த திருமணமான ஜோதி (26) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் உண்டானது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருந்தது. இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. கள்ளக்காதலை கைவிடும்படி பசவராஜ், ஜோதியை அவர்களது குடும்பத்தினர் வற்புறுத்தி வந்தனர். ஆனாலும் 2 பேரும் கள்ளக்காதலை கைவிட மறுத்து விட்டனர்.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பசவராஜும், ஜோதியும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் 2 பேரும் பெங்களூருவுக்கு வந்தனர். இதன்பின்னர் பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி டவுன் சாந்தி சிட்டி பகுதியில் வாடகை வீட்டில் 2 பேரும் வாழ்ந்து வந்தனர். வீட்டு உரிமையாளர், அக்கம்பக்கத்தினரிடம் 2 பேரும் கணவன், மனைவி என்று கூறி இருந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் பசவராஜ், ஜோதி வசித்து வந்த வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அந்த வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றமும் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தேவனஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் கதவை உடைத்து கொண்டு போலீசார் உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது பசவராஜும், ஜோதியும் உடல் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார்கள். அவர்களது உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 2 பேரும் கள்ளக்காதல் ஜோடி என்பதும், வாடகை வீட்டில் கணவன், மனைவி போல வசித்து வந்ததும், தற்போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. ஆனால் அவர்களது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!