கணவர்,மாமனார் தினமும் சித்ரவதை – தூக்கில் தொங்கிய 3 மாத கர்ப்பிணி!

ஜெயங்கொண்டம் அருகே 3 மாத கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் கொலையா? தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்புமணி (வயது 30), கூலித்தொழிலாளி. இவருக்கும் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்த சகுந்தலா (26) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு 8 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. தற்போது சகுந்தலா மீண்டும் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதற்கிடையே மாமனார் செல்வராஜ் (55) அடிக்கடி மருமகள் சகுந்தலாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதை தனது கணவரிடம் கூறிய போது அவர் எதுவும் கண்டு கொள்ளவில்லை.

மேலும் கடந்த சில மாதங்களாக தந்தையும், மகனும் சேர்ந்து தினமும் குடித்து விட்டு வந்து சகுந்தலாவை கர்ப்பிணி என்றும் பாராமல் அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சகுந்தலா தனது வீட்டில் சொன்னால் அவர்கள் வருத்தப்படுவார்கள் என்று எண்ணி வாழ்ந்து வந்தார்.

நேற்று இரவு மீண்டும் சகுந்தலாவிடம் மாமனார் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர் தூங்க சென்று விட்டார். தனி அறையில் தூங்கிக்கொண்டிருந்த சகுந்தலா இன்று காலை தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றிய தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அங்கு திரண்டனர்.

மேலும் அங்கு வந்த சகுந்தலாவின் தம்பி சேகர், அக்காள் கணவரை அடிக்க பாய்ந்தார். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பிணமாக கிடந்த கர்ப்பிணி சகுந்தலாவின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து சகுந்தலா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!