நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் – காளி சிலை காலடியில் மனித தலை!

சிலை காலடியில் துண்டிக்கப்பட்ட மனித தலை வைக்கப்பட்டது நரபலியாக இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் சாலையோர வழிப்பாட்டு தலத்தில் நெஞ்சை பதற வைக்கும் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

அங்குள்ள காளி சிலையின் காலடியில் நேற்று ஒரு மனிதனின் துண்டிக்கப்பட்ட சிலை வைக்கப்பட்டிருந்ததை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

காளி தேவி சிலையின் காலடியில் மனித தலை வைக்கப்பட்ட விதம் நரபலியாக இருக்குமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

இது குறித்து தேவரகொண்டா டிஎஸ்பி ஆனந்த் ரெட்டி தெரிவித்துள்ளதாவது:

கொலை செய்யப்பட்ட அந்த நபருக்கு 30 வயது இருக்கும். அந்த நபர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம். அவரது தலை சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலை துண்டிக்கப்பட்ட நபரின் உடலை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை ஆய்வு செய்து உடலை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், இந்த கொடூர குற்றத்தை செய்தவர்களை பிடிக்கவும் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிலையின் காலடியில் துண்டிக்கப்பட்ட தலை குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

போலீசாரும் அந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இதற்கிடையில், சூர்யாபேட்டையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காவல்துறையினரை தொடர்பு கொண்டு, அந்த நபரின் முக அடையாளங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மனநலம் பாதிக்கப்பட்ட தங்களது உறவினருடன் பொருந்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!