அருள்வாக்கு பூசாரிக்கு நடந்த பயங்கரம் – நேரில் பார்த்த 4 வயது மகன் சாட்சி!

மணப்பாறை அருகே அருள்வாக்கு கூறி வந்த பூசாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வளநாட்டை அடுத்த துலுக்கம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). அப்பகுதியில் கடந்த சில வருடங்களாக அவர் அருள்வாக்கு கூறி வந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை சிங்கிவயல் பகுதியில் ஆதினமிளகி உள்ளிட்ட 4 பேருக்கு சொந்தமான கிணறு உள்ளது. அந்த கிணற்றில் பாலமுருகன் தனது 4 வயது மகன் கருப்பையாவை அழைத்துக் கொண்டு குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆதினமிளகி கிணற்றில் குளிக்க கூடாது என்று கூறியுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பாலமுருகன் தனது மகனை கிணற்றில் இறங்கி குளிக்க வைத்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஆதினமிளகி குளிக்க கூடாது என்று கூறியும் பாலமுருகன் குளித்தத்தால் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.

நெஞ்சில் வெட்டுப்பட்ட நிலையில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து சுமார் 150 மீட்டர் தூரம் நெஞ்சை பிடித்த படி வீட்டை நோக்கி ஓடி வந்துள்ளார். பாலமுருகனின் மகன் கருப்பையா இதனை நேரில் பார்த்த பயத்தில் அங்கிருந்து வீட்டுக்கு ஓடி வந்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

வீட்டில் உள்ளவர்கள் அந்த இடத்திற்கு செல்வதற்குள் பலத்த காயம் அடைந்த பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தியதுடன் பாலமுருகனின் மகன் கருப்பையாவிடம் கேட்டபோது, தந்தையை அரிவாளால் வெட்டியது குறித்து விளக்கியுள்ளார்.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து கொண்டனர். கொலையுண்ட பாலமுருகனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆதினமிளகியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்து உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!