குட்டையில் குளிக்க சென்ற 3 சிறுமிகளுக்கும் நடந்த சோகம் – கதறியழுத பெற்றோர்!

செஞ்சி அருகே குட்டையில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள போந்தை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்கள் கலையரசி(வயது 10), ஹேமாவதி (8). அதே கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபாஷினி(10).

கலையரசி, சுபாஷினி ஆகியோர் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பும், ஹேமாவதி 3-ம் வகுப்பும் படித்து வந்தனர். வெங்கடேசன் இறந்து விட்டதால் கலையரசி, ஹேமாவதி ஆகியோரை அவரது தாய் திலகவதி வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று திலகவதியின் விளைநிலத்தில் நெல் அறுவடை பணி நடைபெற்றது. இதற்கு அவரது குழந்தைகளும் உதவி செய்தனர். இதனை தொடா்ந்து குளிக்க செல்வதாக தாயிடம் கூறிவிட்டு கலையரசி மற்றும் ஹேமாவதி, அதே பகுதியில் உள்ள குட்டைக்கு சென்றனர்.

அங்கு ஏற்கனவே சுபாஷினி, அதே ஊரை சேர்ந்த சவுந்தர்யா உள்பட 3 சிறுமிகள் குளித்துக்கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து கலையரசி, ஹேமாவதியும் குளித்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு சவுந்தர்யா உள்பட 2 சிறுமிகள் வீட்டிற்கு சென்றனர்.

மற்ற 3 சிறுமிகளும் தொடர்ந்து குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது குட்டையில் ஆழமான பகுதிக்கு சென்ற 3 பேரும் அடுத்ததடுத்து தண்ணீரில் மூழ்கினர்.

இதற்கிடையே நீண்ட நேரமாகியும் கலையரசி, ஹேமாவதி, சுபாஷினி ஆகியோர் வீட்டிற்கு வரவில்லை. எனவே அவர்களது பெற்றோர், 3 பேரையும் தேடி குட்டைக்கு சென்றனர். அங்கு 3 சிறுமிகளும் தண்ணீரில் மிதந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேல்சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே 3 சிறுமிகளும் தண்ணீரில் மூழ்கியதால் மூச்சுத்திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும், பெற்றோர்கள் கதறி அழுதனர்.

இது பற்றி அறிந்ததும் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி, இன்ஸ்பெக்டர் தங்கம், சப்-இன்ஸ்பெக்டர் நடராசன் ஆகியோர் நேரில் சென்று குட்டையை பார்வையிட்டனர்.

மேலும் 3 சிறுமிகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். குட்டையில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!