வீட்டை விட்டு தாயை துரத்திய மகன்.. மூதாட்டி தீக்குளிக்க முயற்சி!

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே தொப்பையாபுரத்தை சேர்ந்த தங்கம் மனைவி செல்லமாயி (வயது 80). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று காலை வந்தார். அப்போது அவர் கையில் ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் மற்றும் தீப்பெட்டி கொண்டு வந்தார்.

பாட்டிலை திறக்க முயன்ற போது அங்கு நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவரிடம் இருந்து மண்எண்ணெய், தீப்பெட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அப்போது திடீரென செல்லமாயி மயங்கி விழுந்தார். அவரை போலீசார் கைத் தாங்கலாக அழைத்துச் சென்று அமர வைத்தனர். பின்னர் மயக்கம் தெளிந்த அவர் போலீசாரிடம் கூறுகையில், “எனது மகன் எனது சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டார். பின்னர் என்னை பராமரிக்காமல் வீட்டில் இருந்து துரத்தி விட்டார். அதனால் விரக்தியில் தீக்குளிக்க வந்தேன்” என்றார்.

பின்னர் அவரை தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!