குடுகுடுப்பைக்காரர் சொன்ன அந்த சொல்… மகளை கொன்று தாய் விபரீதமுடிவு!

கோவையில் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்

கோவை துடியலூர் அடுத்த அப்பநாயக்கன்பாளையம் பார்க் சிட்டி பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி தனலட்சுமி(வயது53). இவர்களுக்கு சசிக்குமார்(34) என்ற மகனும், சுகன்யா(32) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமூர்த்தி இறந்து விட்டார். இதையடுத்து மகன் மற்றும் மகளுடன் தனலட்சுமி அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தார். சசிக்குமார் சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தனலட்சுமியின் மகள் சுகன்யா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் மற்றும் மாற்றுத்திறனாளி.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தனலட்சுமி தனது மகன் சசிக்குமாருக்கு திருமணம் செய்து வைத்தார். மகன், மகள் மற்றும் மருமகளுடன் ஓரே வீட்டில் 4 பேரும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, தனலட்சுமி தனது மகனை தனியாக வீடு எடுத்து தங்கி கொள்ளுமாறு கூறினார். இதையடுத்து அவரும் மனைவியுடன் சரவணம்பட்டி பகுதியில் தங்கி இருந்தார்.

இதற்கிடையே சசிக்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக 2 பேரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சசிக்குமார் சரவணம்பட்டியில் உள்ள வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வருகிறார். வார விடுமுறை நாட்களில் தனது தாயாரையும், தங்கையையும் வந்து பார்த்து விட்டு செல்வார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனலட்சுமி தனது மகனுக்கு போன் செய்து பேசினார். அப்போது, அதிகாலை நேரத்தில் நம் வீட்டின் முன்பு வந்த ஒரு குடுகுடுப்பைக்காரர், இந்த வீட்டில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது.

உங்களுக்கும் இன்னும் சில நாட்களில் உடல்நலம் சரியில்லாமல் போய்விடும். எல்லா பிரச்சினைகளும் தீர வேண்டும் என்றால் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறியதாக மகனிடம் தெரிவித்தார். இதனை கேட்ட சசிக்குமார், அதனையெல்லாம் நம்ப வேண்டாம் என தாயாரிடம் கூறி விட்டு போனை வைத்தார்.

இன்று காலை வேலைக்கு செல்வதற்கு முன்பாக சசிக்குமார் தனது தாய்க்கு போன் செய்தார். ஆனால் நீண்ட நேரமாக போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அருகே உள்ளவர்களுக்கு போன் செய்து தனது வீட்டில் தாய், தங்கை இருக்கிறார்களா என பார்க்க சொன்னார்.

அவர்களும் வீட்டிற்கு சென்று சத்தம் கொடுத்தனர். ஆனாலும் யாரும் வரவில்லை. இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அறைக்குள் தனலட்சுமி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

அவரது மகள் சுகன்யா வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார். உடனடியாக அவர்கள் சசிக்குமாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் அவர் வீட்டிற்கு ஓடி வந்து தாய் மற்றும் தங்கையின் உடலை பார்த்து கதறி அழுதார்.

துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக தனலட்சுமி தனது மகளுக்கு விஷத்தை கொடுத்து கொன்று விட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!