தண்டவாளத்தை கடந்த தந்தை-மகள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சோகம்!

மங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர் பகுதியை சேர்ந்தவர் அசீஸ் (வயது 42).

அசீசும் அவரது 10 வயது மகளும் தனூர் – திரூர் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றனர். அப்போது தண்டவாளத்தை கடந்தபோது அந்த வழியாக மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் தண்டவாளத்தை கடந்த தந்தை-மகள் மீது ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், ரெயில்வே ஊழியர்களும் ஓடி வந்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது அசீஸ் சம்பவ இடத்திலேயே பலியாகி இருந்தார். அவரது மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.

ரெயில்வே ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமியும் இறந்தார். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!